Tuesday, November 16, 2010

இரவுகள் தனியாக வருவதில்லை



சில சமயங்களில்
இனிமையைக் கொண்டு வருகின்றன

பல சமயங்களில்
தனிமையைக் கொண்டு வருகின்றன

சில சமயங்களில்
இசையைக் கொண்டு வருகின்றன

பல சமயங்களில்
இயலாமையைக் கொண்டு வருகின்றன

சில சமயங்களில்
நினைக்க மறப்பதைக் கொண்டு வருகின்றன

பல சமயங்களில்
மறக்க நினைப்பதைக் கொண்டு வருகின்றன

சில சமயங்களில்
பேரின்பத்தைக் கொண்டு வருகின்றன

பல சமயங்களில்
பேரலறலைக் கொண்டு வருகின்றன

பெரும்பாலும்
இரவுகள் தனியாக வருவதில்லை

இரவுகள்
கொடுங்கனவுகளின்
கூடாரங்களாகவே இருக்கின்றன

இரவுகள்
இயலாமையின் வேதனையைக்
கூட்டுபவையாகவே இருக்கின்றன

இரவுகள்
பகல்களின் வேஷத்தைக்
கேலி செய்பவையாகவே இருக்கின்றன

இரவுகள்
பகல்களின் சந்தோஷங்களைக்
கேள்விக்குட்படுத்துபவையாகவே இருக்கின்றன

இரவுகள்
பகல்களின் எதிரிகளாகவே இருக்கின்றன

ஆம்
இரவுகள் தனியாக வருவதில்லை தான்
ஆனால்
தூக்கத்தை மட்டும் கொண்டு வருவதே இல்லை

2 comments:

Arun Annamalai said...

இனிமை!!! அருமை!!!

Anonymous said...

really great

Post a Comment